முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன ஊழல் குற்றச்சாட்டில் தமக்கு விதிக்கப்பட்ட 16 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் தண்டப்பணத்தில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நான்கு மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
இதன்படி, சட்டத்தரணி ரஞ்சன் டி சில்வாவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன்முறையீட்டு மனுக்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பிவைப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன 2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த போது குத்தகைக்கு வாகனங்களை பெற்று அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நான்கு வழக்குகளை தாக்கல் செய்தது.
அந்த வழக்குகளின் விசாரணையைத் தொடர்ந்து, பிரதிவாதியான சரண குணவர்தன அந்தக் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஒவ்வொரு வழக்குக்கும் கடுங்காவல் சிறைத்தண்டனையுடன் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதன்படி, நான்கு வழக்குகளுக்காக அவருக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த உயர்நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு 1.8 மில்லியன் ரூபா அபராதமும் விதித்தார்.
குறித்த சிறைத்தண்டனை மற்றும் அபராதத் தொகையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி சரண குணவர்தன மேன்முறையீட்டு நீதிமன்றில் மேற்படி மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்