இந்தியாவுக்கு தப்பிச் சென்ற போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவர் தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மன்னார் பேசாலை பகுதியில் இருந்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜி.விக்னேஸ்வரன் (31) மற்றும் எம்.லூசிநாத் (30) ஆகிய இரு சந்தேக நபர்களும் கம்பஹா மற்றும் வத்தளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளுக்காக கடற்படை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், கடந்த வியாழன் அன்று வத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் இவர்கள் இருவரும் தொடர்புடையவர்கள் என இலங்கை அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த இருவரும் போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகளை இந்நாட்டில் எதிர்நோக்கி வருவதாகவும், அவர்கள் ஒரு வாரத்திற்குள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.