எல் நினோ நிலைமையை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு இரண்டாவது தடவையாக நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.
இதன்படி, சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி தலைமையில் கூடிய இந்த விசேட அமைச்சரவை உபகுழுவும் அதிகாரிகள் குழுவும் எதிர்வரும் எல் நினோ காலநிலை பாதிப்பை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உலகில் எல் நினோவின் அபாயம் 81% என உலக வானிலை ஆய்வு நிறுவனம் தற்போது கணித்துள்ளதாகவும், அதன்படி சமூகத்தால் நேரடியாக பாதிக்கப்படக்கூடிய விவசாயத் தொழில், உணவுப் பாதுகாப்பு, தோட்டத் துறை, நீர் மேலாண்மை மற்றும் எரிசக்தி துறைகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எல் நினோ நிலைமையை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு துறையையும் சேர்ந்த அரச நிறுவனங்கள் தயாரித்துள்ள குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால செயற்திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.