நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
'ஹீனடியனா சுபுன்' எனப்படும் சுபுன் மதுசங்க, ஷேன் டிலான் சில்வா, 'களு மல்லி' எனப்படும் அஷான் பெர்னாண்டோ மற்றும் 'பாபா' எனப்படும் சமீர சம்பத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோதல் இடம்பெற்ற தினத்தன்று விசேட அதிரடிப்படையினர் 301 துப்பாக்கிகளை நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு கொண்டு வந்ததாகவும், சிறைச்சாலை அதிகாரிகளிடம் 70 துப்பாக்கிகள் இருந்ததாகவும், அவற்றின் விஞ்ஞான சாட்சியங்கள் தொடர்பில் பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள், கைதிகள், விசேட அதிரடிப்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள் என 1,395 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபர்கள் என பெயரிடப்பட்டுள்ள நான்கு கைதிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
சந்தேகநபர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.