நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் கைதிகள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் மரணங்கள் மற்றும் காயங்களுக்கு வழிவகுத்த சூழ்நிலைகள், அத்துடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஜூலை 07ஆம் திகதி முன்னறிவிப்பு இன்றி சென்ற போது அதற்குள் நுழைய அனுமதி மறுத்தமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீதான சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த இரண்டு கைதிகள் மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, உரிய விசாரணைகள் தொடர்பில் இறுதி முடிவுக்கு வரவில்லை எனவும், கைதிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட சாட்சியங்களை சேகரித்து மதிப்பீடு செய்யும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்