தற்போது 5% மட்டத்தில் உள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் ஆண்டுகளில் 7% - 8% வரை கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், அந்த பயணத்தில் தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் மற்றும் இலத்திரனியல் துறைகளின் பாரிய பங்களிப்புகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் மற்றும் இலத்திரனியல் துறைகளின் முன்னணி சங்கங்கள், கைத்தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் நேற்று (01) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
உள்ளூர் கைத்தொழில்துறையினரை பலப்படுத்துவதன் மூலம் நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் உண்மையான ஆற்றலை உணர்ந்து கொள்வதற்கு அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு அனைத்து தொழில் முயற்சியாளர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
மேலும், இத்துறையில் தற்போது நிலவும் பிரச்னைகள் குறித்தும், இந்தப் பணியை சமாளிப்பதற்கான முன்மொழிவுகள் குறித்தும் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக அடுத்த வருடம் 2 டிரில்லியன் ரூபாவை மூலதனச் செலவீனமாக ஒதுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் எழும் டொலர் தேவையை பூர்த்தி செய்வதற்கு ஏற்றுமதி துறை இயன்றளவு பங்களிப்பை வழங்க வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு கீழே.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்