2015 முதல் 2025 வரையிலான 10 வருட காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 108,581 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்துள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பால் ராஜ் தெரிவித்துள்ளார்.
இன்று (23) பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2)இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த வருடம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை 4,421 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக, குழந்தைகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், எந்த பாதிப்பும் இல்லாத சூழலில் வீடியோ ஆதாரங்களை பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாகாண மட்டத்தில் ஒன்பது வீடியோ சாட்சியப் பதிவு அலகுகளை அமைப்பதற்கு பொருத்தமான இடங்களை அடையாளம் காண சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுகள் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.