715 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கையின் அந்நியச் செலாவணி முறைமை மற்றும் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளதாக நிதி விசாரணைப் பிரிவுகள் கண்டுபிடித்துள்ளன.
இதன்படி, 2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த பணம் நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட நாடாளுமன்றத்தின் பொது நிதிக் குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதாக கூறி பல நிறுவனங்கள் பொருட்களை இறக்குமதி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்வதுடன், பொருட்கள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்து ஏற்றுமதி செய்யும் போது பொய்யான அறிக்கைகள் மற்றும் விலைப்பட்டியல் தயாரித்து வெளிநாட்டு கணக்குகளுக்கு பெருமளவு பணம் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 105 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்கள் அனைத்திலும் 55 பேர் மட்டுமே ஈடுபட்டுள்ளதாகவும், 13 பெரிய வங்கிகள் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு (FIU) மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், வர்த்தக நிறுவனங்கள், நிதி இடைத்தரகர்கள் மற்றும் இந்த கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வங்கிக் கணக்குகள் ஆராயப்படும் என்றும் அசங்க கரவிட்ட மேலும் தெரிவித்தார்.