நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் நீர்கொழும்பு சிறைச்சாலையின் CCTV கமரா அமைப்பின் DVR இயந்திரங்கள் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கணனி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இதன்படி, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சிறைச்சாலைக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கு குற்றச் செயல் நடந்த இடத்தில் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு நடத்த நில அளவைத் திணைக்களத்திற்கு உத்தரவிடுமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரினர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது உயிரிழந்த சஞ்சு தில்ருக்ஷனின் மரண விசாரணைக்கான சாட்சியப் பதிவு கடந்த 11ஆம் திகதி மாளிகாகந்த நீதிமன்றில் இடம்பெற்றதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த சஞ்சு தில்ருக்ஷனின் சடலத்தில் இருந்து மீட்கப்பட்ட தோட்டாக்கள், உடைகள் மற்றும் இரத்த மாதிரிகள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டன. இந்த பொருட்களை வழக்கு தயாரிப்புகளாக நீதிமன்ற ஆஜர்படுத்தும் அறையில் பாதுகாப்பாக வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் 10 பொலிஸ் அவசர தந்திரோபாயப் படையினர் மற்றும் 21 கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் சிறைச்சாலை நீதிமன்றில் நடைபெறவிருந்த தனியான விசாரணையை இடைநிறுத்த உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறைச்சாலைகள் சட்டத்தின் கீழ் அதற்கான அதிகாரம் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு உள்ளதால், அது தொடர்பில் ஆராய்ந்து எதிர்காலத்தில் உத்தரவு பிறப்பிப்பதாக நீர்கொழும்பு நீதவான் ஷிலானி பெரேரா தெரிவித்தார்.
அனைத்து உண்மைகளையும் கவனத்தில் கொண்ட நீதிமன்றம், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் மற்றும் சாட்சியங்களை பதிவு செய்வதை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்தது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்