பல்வேறு கடந்த அரசாங்கங்களின் கீழ் அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்த சம்பவங்கள் அல்லது தவறுகள் இடம்பெற்ற போது பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் எம்.பி., இதற்கு உதாரணமாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக அப்போதைய ஜனாதிபதி அவரை பதவியில் இருந்து நீக்கியதாக சுட்டிக்காட்டினார். இதுபோன்ற பல முன்னுதாரணங்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தவறு செய்யும் அமைச்சர்கள் உடனடியாக நீக்கப்படுவார்கள் என்றும், அமைச்சர்கள் எளிமையாக வாழ வேண்டும் என்றும் தற்போதைய ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது அறிவித்தாலும், இன்று நடைமுறையில் நடப்பது முற்றிலும் மாறுபட்டது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அண்மையில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக அமைச்சர் கூறியுள்ள நிலையில், உண்மையான பொறுப்புக்கூறல் என்பது தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார வலியுறுத்தியுள்ளார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்