பொத்துவில் றொட்டைக் கிராம மாணவி ரியோன்சியா வரலாற்று சாதனை

Adjust the font size:     

 

மிகவும் பின்தங்கிய பொத்துவில் றொட்டைக் கிராம வரலாற்றின் முதல் தடவையாக 3 ஏ சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார் செல்வி சாந்தலிங்கம் றியோன்சியா என்ற மாணவி.
 
அதுமட்டுமின்றி பொத்துவில் தமிழ் மகா வித்தியாலய வரலாற்றில் முதல் 3 ஏ பெற்ற முதல் மாணவியும் இவரே. ஆகவே மாணவி சாந்தலிங்கம் றியோன்சியா இரட்டை வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.
 
பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள றொட்டைக் கிராமம் அடிப்படை வசதிகளற்ற பின் தங்கிய குக் கிராமமாகும்.அங்கு சுமார் 78 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
 
அங்கிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொத்துவில் தமிழ் மகாவித்தியாலயத்திற்கு மாணவர்கள் சென்று கற்பது வழக்கம்.
றொட்டைக் கிராமத்திலிருந்து சுமார் 20 மாணவர்கள் பிரதான வீதி வரை இரண்டு கிலோ மீட்டர் கால் நடையாக நடந்து சென்று பின்னர் பொத்துவிலுக்கு ஐந்து கிலோ மீட்டர் பஸ்ஸில் பயணிப்பது வழமை.
 
றொட்டையைச் சேர்ந்த சாந்தலிங்கம் கிருஷ்ணகுமாரி தம்பதிகளின் மூன்றாவது புதல்வி ரியோன்சியா. இம் மாணவி காலையில் வீட்டிலிருந்து நடந்து பிரதான வீதியை அடைந்து பின் பேரூந்தினூடாக பாடசாலையை அடைவதும் மீண்டும் பேரூந்தினூடாக பிரதான வீதி அடைந்து மீண்டும் நடந்து வீட்டை அடையும் போது 2.30 மணியாகி விடும்.
 
சிலவேளைகளில் பிரத்தியேக வகுப்பிற்காகபொத்துவிலில் கழித்தால் வீடு வரும் போது நேரம் 6.30 மணியாகி விடும். சில நேரங்களில் யானைகளின் ஆபத்தும் இருக்கும் .இது ஒரு நாள் செயற்பாடு இல்லை 3வருட செயற்பாடு. இவர் இனிமேல் இப்பிராந்தியத்திற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்வார்.
தந்தையார் சாந்தலிங்கம். ஒரு மீனவராக இருக்கின்றார் .ஒரு வறுமைப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த அவர் வரலாற்று இரட்டை சாதனையை புரிந்து இருக்கின்றார்.
 
சாதனை மாணவி சாந்தலிங்கம் றியோன்சியாவிடம் கேட்ட பொழுது .
'எனது ஆரம்பக் கல்வி முதல் உயர்தரம் வரை பொத்துவில் தமிழ் மகாவித்தியாலயத்தில் பயின்றேன் . நான் புலமைப் பரிசில் பரீட்சையில் 140 புள்ளிகளை பெற்றேன். சித்தி அடையவில்லை. சாதாரண தர பரீட்சையில் 5A 2D 1C 1S பெற்றேன்.
 
உயர்தரத்தில் கலை பிரிவில் பயின்றேன்.தமிழ், விவசாயம், புவியியல் பாடங்கள் படித்தேன். நான் எதிர்பார்த்த மூன்று ஏ சித்திகள் கிடைக்கப்பெற்றது. மாவட்டத்தில் 25வது நிலை.1.9 இசட் புள்ளி கிடைக்கப் பெற்றது.
எனது லட்சியம் விவசாயத் துறையில் ஒரு நிபுணராக வருவது என்றார்.
எத்தனை வசதியீனங்கள் சவால்கள் வந்தாலும் படிப்பை ஒருபோதும் கைவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

வி.ரி.சகாதேவராஜா

 

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post