வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி செல்கின்றமையினால் நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் தீர்வொன்றை பெற்றுத் தருமாறு கூறி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் இன்று நாடளாவிய ரீதியில் சாத்வீக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன் ஒரு பகுதியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை முன்பாகவும் சாத்வீக போராட்டம் இடம்பெற்றது.
"வைத்தியர்களை வெளியேற நிர்பந்தித்து, இலவச சுகாதார சேவையை முடக்கும் சதியை முறியடிப்போம்"
"திறமையற்ற #சுகாதார நிர்வாகிகளே ! வைத்தியர்களின் தொழில் உரிமைகளில் கை வைக்காதே"
போன்ற பதாதைகளுடன் அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டில் அண்மைக்காலமாக சுகாதார துறை, பாரிய வீழ்ச்சியை நோக்கி செல்கின்றமைக்கு வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றமையும் ஒரு காரணமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக நாளாந்தம் பொது மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
- மு.அ.மு.சிஹாம் (Oluvil Media)



