அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக; வலயக் கல்விப் பணிமனை, சுகாதார பணிமனை, மாநகர சபை, அனைத்து நிறுவனங்களின் சம்மேளனம், பள்ளிவாயல் பிரதிநிதிகள் மற்றும் பிரத்தியேக கல்வி நிலையங்களின் முகாமையாளர்கள் , பாடசாலை அதிபர்கள் பங்குபற்றுதலோடு 2023.08.10 ஆம் திகதி பிரதேச செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பான கலந்துரையாடலில் மாணவர்களின் நலன்கள் குறித்து பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
- தரம் 6-11 வரையான மாணவர்களுக்கு மாலை 6.00 மணிக்கு பிறகு எந்தவிதமான பிரத்தியேக வகுப்புக்களை நடத்தாமல் இருத்தல். உயர் தர வகுப்பு மாணவர்களில் கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் கற்கும் மாணவர்களுக்கு மட்டும் பி.ப 7.00 மணிவரை வகுப்புக்களை நடாத்த முடியும்2. பெண்பிள்ளைகள் பாடசாலை சீருடையில் மாத்திரம் தனியார் வகுப்புக்களுக்கு வருதல்.
- தரம் 6-11 வரையான மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு ஒரு பாடம் தொடர்பாக 8 மணித்தியாலங்கள் மாத்திரம் ஒதுக்கப்படுதல் வேண்டும்.
- ஒரு மணித்தியாலயத்திற்கு அதி கூடிய கட்டணமாக ரூபா 60 அறவிடுதல் வேண்டும்.
- மாநகர சபை மற்றும் சுகாதார பணிமனையினால் தர நிர்ணயத்திற்கு உட்பட்ட சொகுசு வசதிகளுடன் நடாத்தப்படும் தனியார் நிறுவனங்கள் மாத்திரம் ரூபா 70 வரை அறவிடலாம்.
- ஞாயிற்றுக் கிழமையில் 6-11 வரையான மாணவர்களுக்கு முழு விடுமுறை நாளாக அறிமுகப்படுத்தல். அரச சுற்று நிருபத்திற்கமைவாக இந்நாளில் அகதியா வகுப்புக்கள் நடாத்தப்படுவதுடன் விளையாட்டு பொழுதுபோக்கு மற்றும் மார்க்க விழுமியங்களுக்கு வழி வகுத்துக் கொடுத்தல்.
- பாடசாலை நேரங்களில் எவ்வித பிரத்தியேக வகுப்புக்களையும் நடத்தாமல் இருத்தல்.
- பிள்ளைகளுக்கு மாலை, இரவு நேரங்களில் வீட்டிலேயே ஆசிரியர்களை வரவழைத்து கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை முற்றாகத் தவிர்த்தல்.
- தரம் 1-3 வரையான மாணவர்களுக்கு எவ்வித பிரத்தியேக வகுப்புக்களும் நடத்தப்படாமல் குர்ஆன் மத்ரஸாவிற்கும் மார்க்க ரீதியான கல்விக்கும் வாய்ப்பளித்தல்.
- வளப்பற்றாக்குறையுடைய தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் நலன் கருதி உரிய உட்கட்மைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல். இவை மாநகர சபை மற்றும் சுகாதார பணிமனை போன்றவற்றினால் பரிசோதிக்கப்படும். இப்பரிசோதனையில் போதிய வசதிகளை வழங்காது நடாத்தப்படும் கல்வி நிலையங்களுக்கு எதிராக உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே மேற்குறித்த தீர்மானங்கள் அனைத்தும் 2023 செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனபதுடன் பொற்றோர்கள் குறித்த விடயத்திற்கு ஒத்துழைத்து மாணவர்களின் கல்வி, விளையாட்டு, ஓய்வு, மார்க்க விழுமியங்கள், ஒழுக்க மேம்பாடு போன்றவற்றை மேம்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
பிரதேச செயலாளர்
அக்கரைப்பற்று.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Eastern
